தமிழகத்தில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டின் சில இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில், அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.அதற்கு அடுத்தடுத்த இடங்களாக ஈரோடு, வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம், திருப்பத்தூர், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது.
எனினும், வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்க வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.