தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் களத்தில் தீவிர உழைப்புடன் மக்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டிக் கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாளை (வெள்ளிக்கிழமை) காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் டி.கே. பிரபு உள்ளிட்ட திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய நான்கு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காரைக்குடியில் மாபெரும் பிரசாரத்தை நடத்த உள்ளார்.

இந்த பிரசாரக் கூட்டம், காரைக்குடி தேவர் சிலை அருகே பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், காரைக்குடி உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து விரிவாக பரிசீலனை செய்தனர்.
மேலும், காரைக்குடி தொகுதி வேட்பாளர் டி.கே. பிரபுவுடன் சந்தித்து, கூட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விஜயின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காரைக்குடியில் நடைபெறவுள்ள இந்த பிரசார நிகழ்வை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கட்டுப்பாடின்றி உயரமான இடங்களில் ஏறுவதைத் தடுக்க, டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிகழ்வு முழுவதும் சீராக நடைபெற தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.