நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘நடிகர்கள் பின்னால் இளைஞர்கள் செல்லக்கூடாது.. படிப்பில் கவனம் செலுத்துங்கள்.. நடிகரின் பின்னால் சென்று கீழே விழுந்து விபத்தில் சிக்கினால் அது உங்களுக்குதான் பிரச்சனை.. யாரும் உதவ முன் வர மாட்டார்கள்’ என்றெல்லாம் திடீரென இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னார் . விஜயை மனதில் வைத்துதான் ரஜினி பேசியதாக நம்பப்பட்டது. இந்நிலையில், ரஜினியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார்..
விஜய்யை கண்டு அலறும் தலீவர்:
இந்த தேர்தலில் தவெக தோற்றால் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட அதிக சந்தோஷப்படப்போவது தலீவர்தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான்.
25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார். 2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார்...
25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும் அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை. சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை.
சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும் அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் வெற்றிபெறலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது. சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார்.