தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'கொரோனா காலத்தில் இவரே போயிருப்பார்' எனப் பேசியிருப்பது சர்ச்சையானது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தி.நகர் சத்யாவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கையில், 'அதிமுக ஆட்சியில் புயல், மழை, கொரோனா என எல்லாம் வந்தது. நாங்கள் விலைமதிப்பற்ற மக்களின் உயிரை காப்பாற்றினோம். திமுக ஆட்சியில் அப்படி எதாவது வந்ததா? திமுக ஆட்சியில் புயல், மழை, கொரோனா வந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார். கொரோனா வந்திருந்தால் கொரோனாவிலேயே போயிருப்பார்' என்றார்.
அதற்கு பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், 'மரணத்தை பார்த்து பயப்படக்கூடியவனோ கலங்கக்கூடியவனோ நான் அல்ல. கொரோனா காலக்கட்டத்தின் போது எல்லாரும் அச்சத்தில் இருந்தார்கள். அப்போது பாதுகாப்பு கவசங்களோடு கொரோனா அறைக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின். அதை என் மனைவியிடம்கூட சொல்லவில்லை. அதற்காக அவர் என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரமாக பேசவே இல்லை' என்றார்.
இந்நிலையில், இன்று சேப்பாக்கத்தில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் பேசியதாவது, 'கொரோனா காலக்கட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கு சரியாக உதவவில்லை. ஓடோடி போட்டோஷுட் எடுக்கும் ஸ்டாலின் அப்போது காணாமல் போய்விட்டார். 'காணாமல் போய்விட்டார்' என்றுதான் சொன்னேன். ஸ்டாலினை பற்றி தவறாக பேச வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால், என்னை நீங்களும் உதயநிதியும் என்னவெல்லாம் பேசுகிறீர்கள்? நீங்கள் பேசினால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்' என்றார்.