ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் (TASS) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இனி ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே செல்ல ஈரான் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த திடீர் கட்டுப்பாடு உலகளாவிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு வரும் எல்பிஜி (LPG) மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நாட்டின் எல்பிஜி, கச்சா எண்ணெய் மற்றும் ரசாயன பொருட்களின் இருப்பு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் நாட்டில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தற்போது சீராக இருப்பதாகவும், நிலவி வரும் தட்டுப்பாடுகளை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தினசரி 58 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.வணிக ரீதியான சிலிண்டர்களின் இருப்பு சுமார் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரே நாளில் 6,700 டன் வணிக எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 3.5 லட்சம் சிலிண்டர்களுக்கு சமமாகும். மேலும், அதே காலக்கட்டத்தில் சுமார் 1.06 லட்சம் ஐந்து கிலோ சிலிண்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய கடல் பகுதியே ஹார்முஸ் ஜலசந்தி ஆகும். இதன் அகலம் வெறும் 34 கிலோமீட்டர் மட்டுமே என்றாலும், இது உலகின் 'பொருளாதார நரம்பு மண்டலமாக' கருதப்படுகிறது.வளைகுடா நாடுகளை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய பாதையாக இது உள்ளது.உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1/5) இந்த வழியாகத்தான் செல்கிறது. எண்ணெய் மட்டுமின்றி, உரங்கள் மற்றும் அத்தியாவசிய விவசாயப் பொருட்களும் இந்த கடல் பாதை வழியாகவே உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஈரானின் இந்த புதிய கட்டுப்பாடுகள் சர்வதேச எரிசக்தி சந்தையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.