ராஜஸ்தானில் மங்களகரமான நாட்களில் அதிகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களைத் தடுக்க அம்மாநில அரசு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இனி திருமண அழைப்பிதழ்களில் மணமகன் மற்றும் மணமகளின் பிறந்த தேதியை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் புனித நாட்களில் ரகசியமாக நடத்தப்படும் குழந்தை திருமணங்களைக் கண்டறியவும், சட்டப்படி வயதை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மற்றும் குழந்தை திருமணங்களுக்குத் துணையாக இருக்கும் மண்டப உரிமையாளர்கள், புரோகிதர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் இசைக்குழுவினர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 181 மற்றும் 100 ஆகிய உதவி எண்கள் மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.