நின்று போன ஸ்மிருதி மந்தனா திருமணம் மீண்டும் நடக்க போகிறதா? இரு குடும்பத்தினர் சந்திப்பு?
Webdunia Tamil April 09, 2026 06:48 PM

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தித்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருந்த இவர்களது திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு மீண்டும் இவர்களிடையே சமாதானம் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களை எழுப்பியுள்ளது.

மும்பையில் நடந்த இந்த சந்திப்பின் போது, பலாஷ் முச்சலின் சகோதரியும் பாடகியுமான பாலக் முச்சல், ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீநிவாஸின் காலில் விழுந்து ஆசி பெற்றார். முன்னதாக, இவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்ட போது, பலாஷ் மீது ஸ்மிருதியின் நண்பர் விஞ்ஞான் மானே சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பலாஷ் துரோகம் செய்ததாகவும், அதனால் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளால் அவர் தாக்கப்பட்டதாகவும் மானே கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பலாஷ் முற்றிலுமாக மறுத்ததுடன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ பழையதா அல்லது புதியதா என்ற விவாதம் ஒருபுறம் நடந்தாலும், இரு குடும்பத்தினரும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த சந்திப்பு குறித்து மந்தனா அல்லது முச்சல் குடும்பத்தினர் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.