“பி.ஏ. வந்து உங்களைப் பார்ப்பார்”... வெற்றிக்கு ஓடி ஓடி உழைத்தவரை உதாசினப்படுத்திய வானதி
Top Tamil News April 09, 2026 01:48 AM

கோவை கே.ஜி. மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்பனை செய்து வரும் ‘கடலை பாலன்’ என்ற பாஜ தீவிர விசுவாசியின் குமுறல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கோவை அதிமுக வேட்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயராம் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்காகத் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றிய இவர், தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார். தனது மருத்துவச் செலவுகளுக்காகப் பலமுறை வானதி சீனிவாசனை நேரில் அணுகியும், அவர் இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும், குறைந்தபட்சம் ஆறுதல் கூடக் கூறவில்லை என்றும் கடலை பாலன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். உதவி கேட்டுச் செல்லும் போதெல்லாம் “பி.ஏ. வந்து உங்களைப் பார்ப்பார்” என்று கூறி வானதி சீனிவாசன் தன்னை அலைக்கழித்ததாகக் குறிப்பிடும் பாலன், தனது வீட்டின் அருகே பிரசாரத்திற்கு வந்தபோது கூட அவர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார். 


“உண்மையான கட்சித் தொண்டனுக்கே சிறு உதவி கூடச் செய்யாத இவர்கள், தொகுதி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்?” என்று அவர் எழுப்பியுள்ள கேள்வி தற்போது தனியார் யூடியூப் சேனல் வீடியோ மூலம் வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழலில் கட்சித் தொண்டர் ஒருவர் கைவிடப்பட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.