தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சூழலில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி முக்கியமான நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பொதுத் தொகுதியாகும். இந்த தொகுதியில் செங்கல்பட்டு நகரம், பாளையம் மற்றும் சுற்றியுள்ள வளர்ந்து வரும் புறநகர் பகுதிகள் அடங்குகின்றன. வேகமாக வளர்ந்து வரும் தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் கலந்த அமைப்பில் உள்ளனர். இங்கு பெரும்பாலும் தொழிற்சாலைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகமாக உள்ளன. மேலும், நெல் மற்றும் காய்கறி விவசாயமும் முக்கியமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் அமைந்திருப்பதன் காரணமாக, ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் சுமார் 1,30,573 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 1,03,098 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு தொகுதியைப் பொருத்தவரையில், திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 1977ஆம் ஆண்டு முதல், திமுக மற்றும் அதிமுக தலா நான்கு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் நகர வளர்ச்சி, தொழில் வாய்ப்புகள் மற்றும் கலப்பு வாக்காளர் அமைப்பு காரணமாக, இது தமிழ்நாட்டின் முக்கியமான மற்றும் கடுமையான போட்டி நிலவும் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்த தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் தண்டபாணி, அதிமுக சார்பில் கஜேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ். தியாகராஜன், மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா நம்பியார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். sஇந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவுவதால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.