“முதலமைச்சர் கொரோனாவில் போயிருப்பார்” - எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு
Top Tamil News April 09, 2026 01:48 AM

திமுக ஆட்சியில் கொரோனா போன்ற பேரிடர்கள் இல்லை, அப்படி வந்திருந்தால் முதலமைச்சர் முதலமைச்சர் கொரோனாவில் போயிருப்பார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, “என் மீது தேவையில்லாத அவதூறுகள் பரப்பப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்பால் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்ற தொகுதி வரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது. நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுவதைவிட்டு நாடாளுமன்ற தொகுதி வரையறை பற்றி மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்த அடுத்த நாள் தேர்தல் வாக்குறுதிகளை  ஜெட் வேகத்தில் வெளியிட்டோம். திமுகவைப் போல் பத்து நாள் கழித்து வெளியிடவில்லை.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால்தான் இன்று தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி. தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைக்கிறது திமுக. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கடைகளில் வாங்கும் அரிசியை விட தரமான அரிசி நியாயவிலை கடைகளில் வழங்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தது. திமுக ஆட்சியில் கொரோனா போன்ற பேரிடர்கள் இல்லை, அப்படி வந்திருந்தால் முதலமைச்சர் முதலமைச்சர் கொரோனாவில் போயிருப்பார்” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.