உஷார்... தாகம் இல்லைன்னாலும் தண்ணீர் குடிங்க... தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்!
Dinamaalai April 09, 2026 09:48 AM

தமிழகத்தில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தின் 7 முக்கிய நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 41°C (105.8°F) பதிவாகியுள்ளது. ஈரோடு: 40°C (104°F), வேலூர்: , 39.3°C (102.74°F), நாமக்கல்: 38.9°C (102.02°F), திருப்பத்தூர்: 38.8°C (101.84°F), பாளையங்கோட்டை: 38.6°C (101.48°F), மதுரை விமான நிலையம்: 38.4°C (101.12°F)

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வெப்பநிலை 36°C முதல் 37°C வரை பதிவாகக்கூடும். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகக் காற்றுடன் ஈரப்பதம் கலந்து வருவதால், வெப்பநிலை குறைவாகத் தெரிந்தாலும் உடலுக்கு ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் 50°C போல உணரப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வெப்பச் சலனம் காரணமாகச் சென்னை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மாலை சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தற்காலிகமான நிம்மதியை மட்டுமே தரும்.

தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர், இளநீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் பருக வேண்டும். நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற வெயில் பயணங்களைத் தவிர்க்கவும். வெளிர் நிறப் பருத்தி உடைகளை அணியவும்.

தற்போது தேர்தல் காலம் என்பதால், பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் முதியவர்கள் குடை மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் கையுடன் கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.