தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நேற்று வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லிவாக்கம் ஐசிஎப் காலனி மற்றும் பாளயகாரத் தெரு ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்த அவர், பின்னர் நடைபெற்ற தெருமுனைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
ஓட்டுக்கு எட்டாயிரம், பத்தாயிரம் எனப் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என ஆளும் கட்சியினர் பகல் கனவு காண்கிறார்கள் என்றும், அந்த ஆட்டம் இனி செல்லாது என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதி மக்கள் தன்னைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்தப் பாசமும் அன்பும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் வராது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை வியாபாரமாகப் பார்க்கும் வாரிசு அரசியலுக்கு எதிராக, மக்களைத் தன் குடும்பமாகப் பார்க்கும் தளபதி விஜய்யை தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து வில்லிவாக்கத்தின் நலனை வென்றெடுப்போம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.