கேரள மாநிலம் கண்ணூர் அருகே பெண் காவலர் திவ்யஸ்ரீயை கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், அவரது கணவர் ராஜேஷுக்கு நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனியாக வசித்து வந்த திவ்யஸ்ரீயை, ராஜேஷ் அவரது வீட்டிற்குள்ளேயே புகுந்து வெட்டிக் கொலை செய்தார்.
மனைவி விவாகரத்து கோரியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் துணிகரக் கொலையைச் செய்ததாக ராஜேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து ராஜேஷுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கும் வகையில் இந்தத் தண்டனையை வழங்கி உத்தரவிட்டுள்ளது.