உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து பாங்கே பிஹாரி கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்த சுமார் 33 பக்தர்கள், யமுனை ஆற்றில் படகில் பயணம் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அந்தப் படகு அங்கிருந்த பான்டூன் பாலத்தின் மீது மிக பலமாக மோதியது. அப்போது படகு மோதிய வேகத்தில் நிலைகுலைந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்ததில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.
அப்போது 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் 10 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.