தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ்வரன் (38). இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு வேலைக்காக திண்டுக்கல் வந்தபோது அங்கு அவருக்கு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு 13 மற்றும் 12 வயதில் 02 மகள்கள் உள்ள நிலையில், விக்னேஷ்வரன் பெண்ணுடன் நெருங்கி பழகவே, இருவரும் ஒன்றாக வசிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் திண்டுக்கல்லில் வாடகைக்கு வீடு எடுத்து விக்னேஷ்வரன், அந்தப் பெண் மற்றும் அவரது 02 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அந்த சூழலில், அந்தப் பெண் வீட்டில் இல்லாதபோது இரண்டு சிறுமிகளையும் விக்னேஷ்வரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விக்னேஷ்வரனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது விக்னேஷ்வரனுடன் சேர்ந்து பெண்ணின் உறவினரான உத்தமபாளையத்தை சேர்ந்த முருகவேல் (42) என்பவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து 02 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்தியதாரா நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த விக்னேஷ்வரன், முருகவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத் தரப்பில் தலா ரூ.07 லட்சத்து 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.