தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்த மாணவர்கள், தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) வாக்களிக்கக் கூடாது என பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். சினிமாவில் நடிப்பவர்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று எச்சரித்த அவர், சினிமாவை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அரசு நிர்வாகம் என்பது முற்றிலும் மாறுபட்டது என்றும் சாடினார்.
குறிப்பாக, தமிழகத்தில் நிலவிய ஒரு பிரச்சினைக்காக 72 நாட்கள் விஜய்யைக் காணவில்லை எனக் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒருபோதும் ஒப்பிடக் கூடாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.