டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கவும் டெல்லி அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, டெல்லி மின்சார வாகனக் கொள்கை 2.0 வரைவு அறிக்கையில், வரும் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் புதிய இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தலைநகரில் இனி மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே புதிய பதிவுக்கு அனுமதிக்கப்படும். பெட்ரோல் வாகனங்கள் வாங்க திட்டமிடும் சாமானியர்களுக்கு இது சவாலாக இருந்தாலும், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30,000 வரை வழங்க அரசு முன்வந்துள்ளது. மேலும், சாலை வரி விலக்கு மற்றும் பதிவுக் கட்டண தள்ளுபடி போன்ற சலுகைகளும் இதில் அடங்கும்.
டெல்லியில் உள்ள மொத்த வாகனங்களில் இருசக்கர வாகனங்களே மூன்றில் இரண்டு பங்கு இருப்பதால், இந்த மாற்றம் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாமை மற்றும் மின்சார வாகனங்களின் அதிகப்படியான ஆரம்ப விலை ஆகியவை பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த முடிவால் பெரும் வணிக பாதிப்பை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027-க்குள் புதிய வாகனப் பதிவில் 95% மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்பதே டெல்லி அரசின் இலக்காகும்.
Edited by Siva