ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், மனித மனசாட்சியை உலுக்கியுள்ளது. திருமண விழா ஒன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்துள்ளது.
மேலும் தனது மனைவியைக் கொலை செய்த கணவன், உடலை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக வீட்டின் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவுநீர் தொட்டிக்குள் வீசியுள்ளார். அதன் பிறகு, தனது மனைவி வீட்டை விட்டு ஓடிவிட்டதாக ஊர் மக்களிடம் நாடகமாடி வந்துள்ளார். இருப்பினும், உண்மை அதிக காலம் மறைந்திருக்கவில்லை அந்த நபரின் நான்கு வயது மகனே அந்தப் பயங்கரமான உண்மையை உடைத்துள்ளார்.
இதனால் கிராம மக்கள் முன்னிலையில் அந்தச் சிறுவன், “அம்மா செப்டிக் டேங்கிற்குள் இருக்கிறார்” என்று மழலை மாறாத குரலில் கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து சோதனை செய்ததில் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தனது குழந்தைகள் முன்னிலையிலேயே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தப்பிக்க முயன்ற அந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு பிஞ்சு குழந்தையின் வாக்குமூலம் குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.