சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவரை நலம் விசாரிக்க வந்த அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை, ராமதாஸின் மூன்றாவது மகள் கவிதா கணேஷ் கடுமையாகச் சாடி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்நலச் சோர்வு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டிருந்த வேளையில், ஜி.கே. மணியும் அங்கு வருகை தந்தார்.
ஜி.கே. மணியைக் கண்டதும் ராமதாஸின் மகள் கவிதா கணேஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே அவரை நோக்கி, "எங்கள் குடும்பத்தை பிரித்த படுபாவி நீங்கள்தான், இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், "எங்கள் குடும்பத்தில் சூழ்ச்சி செய்து விரிசலை உண்டாக்கிவிட்டு, உங்கள் மகனுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் சீட்டு வாங்கித் தந்துவிட்டீர்கள். உங்களுக்கு திமுகவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் தாராளமாகச் செல்லுங்கள், உங்களை யார் தடுத்தது? ஆனால், எதற்காக எங்கள் குடும்பத்தை குறிவைத்துச் சதி செய்தீர்கள்?" என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
கவிதா கணேஷின் இந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன ஜி.கே. மணி, எவ்வித பதிலும் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார். "இதுவரை இந்த குடும்பத்திற்கு நீங்கள் செய்த துரோகம் போதாதா? இதற்கு மேல் என்ன பாக்கி இருக்கிறது? இங்கேயும் ஏதேனும் சூழ்ச்சி செய்ய வந்தீர்களா? எனக்கு வரும் கோபத்திற்கு என்ன செய்வேன் என்றே தெரியாது, மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடுங்கள்" என கவிதா கணேஷ் கொந்தளித்ததைக் கண்டு, அங்கிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த எதிர்பாராத எதிர்ப்பால் செய்வதறியாது திகைத்த ஜி.கே. மணி, அங்கிருந்து உடனடியாக வெளியேறி தனது காரில் ஏறிச் சென்றார். பாமகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கும், மூத்த நிர்வாகிக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.