உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூடானில், மில்லியன் கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மோதலால், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி அங்கு உருவாகியுள்ளது.
இது குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பசியின் கொடுமையால் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் உண்டு உயிர் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 2.89 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளதாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
விவசாய நிலங்கள் போர்க்களங்களாக மாறியதும், சந்தைகள் முடக்கப்பட்டதும் இந்த உணவுப் பற்றாக்குறைக்கு முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன. போதிய நிதி வசதி இல்லாததால் அங்கு இயங்கி வந்த சமூக சமையல் கூடங்களும் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், உணவு தேடி வெளியே செல்லும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை போன்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் துயரமும் நிகழ்ந்து வருகிறது. சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு உதவ முன்வராவிட்டால், சூடான் வரலாறு காணாத உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் என மனிதாபிமான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.