டெல்லியில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்..
TV9 Tamil News April 14, 2026 04:48 PM

டெல்லியில் உள்ள துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்றிருந்தார். அங்கு ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், பிறகு அவரது இல்லத்தில் உள்ள பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடிக்கு முருகப்பெருமான் புகைப்படத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் பரிசளித்தார்.

தமிழக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து:

சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்.@VPIndia @CPR_VP pic.twitter.com/4gmiT2ML6u

— Narendra Modi (@narendramodi)

தொடர்ந்து, தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது, புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.

ஒற்றுமை உணர்வு வளரட்டும்:

அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி:

அதேசமயம், பிரதமர் மோடி தனது வீட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது குறித்து துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், பிரதமர் மோடி இன்று துணைக் குடியரசுத் தலைவர் மாளிகையில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

பிரதமருடன் கலந்துரையாடல்:

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடன், இன்று துணைக் குடியரசுத் தலைவர் மாளிகையில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அனைவருக்கும் வளமும், நலமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிரம்பிய சிறந்த ஆண்டாக இப்புத்தாண்டு அமைய… pic.twitter.com/lVNzXq6iMK

— Vice-President of India (@VPIndia)

அனைவருக்கும் வளமும், நலமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிரம்பிய சிறந்த ஆண்டாக இப்புத்தாண்டு அமைய பிரார்த்தித்தோம். தமிழ்ப் புத்தாண்டு நம் முன்னோர்களின் ஞானத்தை வெளிப்படுத்துவதோடு, பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வைப் போற்றும் ஒப்பற்ற விழாவாக கொண்டாடப்படுவதைப் பற்றி கலந்துரையாடினோம்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து:

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு தினத்தில், அனைவருக்கும் என் இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.