தனுஷ்கோடி - தலைமன்னார் 58 கி.மீ தூரம் நீந்திக் கடந்த 20 வயது நீச்சல் வீராங்கனை
Vikatan April 14, 2026 08:48 PM

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் காம்யா பரத்வாஜ் (20). தேசிய நீச்சல் வீராங்கனையான இவர் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல் பரப்பினை நீந்திக் கடக்கத் திட்டமிட்டிருந்தார். இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்னரை மணி அளவில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கினார்.

பயிற்சியாளர்களுடன் நீச்சல் வீராங்கனை காம்யா பரத்வாஜ்

இடையில் விதிகளின் படி கடலில் மிதந்தவாறு சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த காம்யா அன்று இரவு 10.30 மணிக்கு தலைமன்னார் துறைமுகத்தில் கரை ஏறினார். சுமார் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்த அவர் மீண்டும் நள்ளிரவு 11 மணியளவில் தலைமன்னார் துறைமுகத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தத் தொடங்கினார்.

தனுஷ்கோடி - தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான இந்த 58 கி.மீ தூரத்தினை நீந்தி கடந்த காம்யா திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரையேறினார். இதுவரை தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான ஒரு வழித்தடத்தை மட்டுமே வீரர் வீராங்கனைகள் நீந்திக் கடந்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கும் இடையிலான 58 கி.மீ தூரத்தினை 17 மணி 45 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதனை படைத்த நீச்சல் வீராங்கனை காவ்யா பரத்வாஜை நீச்சல் பயிற்சியாளர் ரோஜர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.