Donald Trump: திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்.. இதுதான் விஷயமா?
பேச்சி ஆவுடையப்பன் April 14, 2026 11:44 PM

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த அந்த தொலைபேசி உரையாடலின் போது, ​​ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழல் மற்றும் தர வேண்டிய ஒத்துழைப்பு பற்றியும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “என் நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் எட்டப்பட்ட கணிசமான முன்னேற்றத்தைப் பற்றி நாங்கள் ஆலோசனை செய்தோம். அனைத்துத் துறைகளிலும் நமது விரிவான உலகளாவிய கூட்டுத்தன்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மேலும், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் நாங்கள் விவாதித்தோம், அத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உரையாடலின்போது, இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள் என அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடரும் பேச்சுவார்த்தை

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதனால் கடுப்பான ஈரான் ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக உலக நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. ஈரானின் உச்ச தலைவர் உட்பட பலரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது.

தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த போரானது கடந்த வாரம் தற்காலிகமாக இரண்டு வாரம் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இரு தரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆனால் 21 மணி நேரம் பேச்சுவார்த்தை சென்றும் இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். தொடர்ந்து தகவல்களை ட்ரம்ப் பிரதமர் மோடியிடம் பறிமாறி வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் தெரிவித்துள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.