3 கோடி பேர் பட்டினியால் வாடும் அவலம்... சூடானில் உணவின்றி இலை தழைகளை உண்ணும் மக்கள்!
Dinamaalai April 14, 2026 11:48 PM

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எஃப் (RSF) என்ற துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர், அந்நாட்டை வரலாற்றுப் பாராத பசி கொடுமைக்குள் தள்ளியுள்ளது. சுமார் 2.89 கோடி மக்கள் (அந்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்) ஒருவேளை உணவின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

போரினால் விளைநிலங்கள் போர்க்களங்களாக மாறியுள்ளன; சந்தைகள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. வேறு வழியின்றி, அங்குள்ள மக்கள் மரங்களின் இலை தழைகளைச் சமைத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் பசியைத் தீர்க்க, கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய தரம் குறைந்த தீவனங்களை மக்கள் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது பலருக்குக் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த மோதல், 2026-ஆம் ஆண்டிலும் தீவிரமாக நீடித்து வருகிறது. சுமார் 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக அலைகின்றனர்.

சர்வதேச நாடுகள் அனுப்பும் உணவு உதவிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ராணுவக் கட்டுப்பாடுகள் பெரும் தடையாக உள்ளன. "பசியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை ஒடுக்க ராணுவப் படைகள் முயல்கின்றன" என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

உலக உணவுத் திட்டம் (WFP) விடுத்துள்ள எச்சரிக்கையில், சூடானின் பல பகுதிகளில் 'பஞ்ச நிலை' (Famine) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. போரை உடனடியாக நிறுத்தத் தவறினால், வரும் மாதங்களில் பல லட்சம் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.