சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடக் கட்சிகளுக்குப் பகிரங்கமான சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்கள் நலனைச் சிந்திக்காமல், தங்களது தவறுகளை மறைக்க ஓட்டுக்குக் காசு மற்றும் இலவச அறிவிப்புகளைக் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் கடுமையாகச் சாடினார்.
மேலும் தைரியமிருந்தால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகள் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். மக்களுக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்த சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை உலகின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவேன் என்று உறுதி அளித்தார்.
மேலும், தங்களது நிர்வாகத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் முன்பாக வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல் தேர்தலைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அரசியல் சூழலை மாற்றி, நேர்மையான ஆட்சியை வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.