நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின்
Vikatan April 19, 2026 05:48 PM

திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அப்போது அவர் பேசியது.

இந்தியாவில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு திருப்பூருக்கு வந்துள்ளேன். நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது. தொகுதி மறுவரையறையின் ஆபத்தை ஓராண்டுக்கு முன்பே எடுத்துரைத்தேன். நாமக்கல்லில் பற்ற வைத்த தீ இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது.

பணமதிப்பிழப்பு என்ற கறுப்பு தினத்தை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். ஜி.எஸ்.டி.யுடன் சேர்ந்து இந்த நடவடிக்கைகள் தொழில் நகரமான திருப்பூரை மிக அதிகமாக பாதித்தது. பாஜக ஆட்சியில் மக்கள் அனுபவித்த வேதனைகள் அளவிட முடியாதவை. இன்றுகூட பொய்களைக் கூறி வாக்கு கேட்கின்றனர்.

திமுக வேட்பாளர்கள்

மேலும், “சொல்வதற்கு கொள்கையும் சாதனைகளும் இல்லாத பழனிசாமி அவதூறு பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்” எனக் கூறினார்.

அரசுத் திட்டங்களை விளக்கிக் கூறிய முதலமைச்சர், “மகளிருக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆகவும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும் உயர்த்தப்படும். மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் முன்னிலையில் உள்ளது” என்றார்.

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் | Photo Album

மேலும் திருப்பூரில் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், ``தாராபுரம் தொகுதியில் அரசு கல்லூரி அமைப்பது, தந்தை பெரியார் நகர் அருகே உயர்மட்ட பாலம் அமைப்பது, பில்லூர் நீர்த்தேக்கத்தை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது, தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் அமைப்பது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவுகொடுக்கத் துணிந்துவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு 11-வது தோல்வியைக் கொடுக்க வேண்டும். வெகுமானத்திற்காக தன்மானத்தை இழந்து, இனமானத்திற்கு துரோகம் செய்யும் அடிமைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாசிச பாஜகவும், அடிமை அதிமுக-வும் வேரோடும், வேர் மண்னோடும் வீழ்த்தப்படும்.

மு.க. ஸ்டாலின்

டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என வருவது எதற்காக, உரிமைத் தொகையை நிறுத்துவதற்காக, விடியல் பயணத்தை முடக்குவதற்காக, புதுமைப்பெண் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக, இடஒதுக்கீட்டை பறித்து சமூக நீதியை படுகுழியில் தள்ளுவதற்காக.

இதைத்தான் பா.ஜ.க கூட்டணி மற்றும் மாநிலங்களில் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள். இதை மக்கள் உணர வேண்டும் என்று கூறி முடித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.