பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தற்போது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக களமிறங்கி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் உடல்நலக் கோளாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரசார பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென கடுமையான கால் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு வழங்கப்பட்ட மருந்துகளுக்கு எதிர்வினையாக அலர்ஜி ஏற்பட்டதால், நிலைமை சற்றே சிக்கலானதாக மாறி, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வானதி சீனிவாசன் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது உடல்நிலை குறித்து அக்கறை காட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக, டெல்லி முதல்-மந்திரி திருமதி ரேகா குப்தா நேரில் வந்து சந்தித்து உடல்நலம் விசாரித்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
“என் உடல்நலம் குறித்து அக்கறையுடன் வந்து சந்தித்து, நான் விரைவில் குணமடைய வேண்டி தெரிவித்த நல்வாழ்த்துகளுக்கும், செய்த பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் பிரசார பணிகளின் நடுவிலும் நேரம் ஒதுக்கி கோவைக்கு வருகை தந்தது எனக்கு பெரும் உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து வழங்கி வரும் அவரின் ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் உடல்நலப் பிரச்சனை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.