'நன்மை, தீமை எது என பிரித்து பார்க்க தெரியாத நாடுகள் இஸ்ரேலிடமிருந்து பாடம் கற்று கொள்ளலாம்'; பெஞ்சமின் நெதன்யாகு..!
Seithipunal Tamil April 16, 2026 02:48 AM

இஸ்ரேலில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் யூத இனப்படுகொலை நினைவு தினத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார். அப்போது அவர் ''இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களின் கையில் சிக்கி தவித்த யூதர்கள், அன்று ஒரு பலவீனமான விலங்கை போல கதறினார்கள். ஆனால், இன்றைய நவீன இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தெரிந்த ஒரு வலிமையான நாடு என்று.' என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யூதர்களுக்கு எதிராக இரண்டாவது முறை ஒரு இனப்படுகொலை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்துள்ளார்.

அத்துடன், அந்த வாக்குறுதியை இந்த ஆண்டு செயலில் நிரூபித்து காட்டி உள்ளோம் என்று அவர் கூறியுள்ளமை, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நியாப்படுத்தி பேசியுள்ளதாக சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், நாங்கள் (இஸ்ரேல்) உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் நாஜிக்களின் மரண முகாம்களை போலவே ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஓராண்டில் ஈரான் மீது நடந்த கூட்டு தாக்குதல்கள் அந்த நாட்டின் தீய ஆட்சிக்கு ஒரு மரண அடியை கொடுத்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய நிலையை மிக கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, ஐரோப்பா தனது அடையாளத்தையும், விழுமியங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை இழந்து வருவதாக கடுமையாக விமரித்துள்ளார்.

மேலும், "ஆபரேஷன் ரைசிங் லயன்" மூலமாகவும், அதிலும் குறிப்பாக "ஆபரேஷன் ரோரிங் லயன்" மூலமாகவும், இஸ்ரேல் சுதந்திர உலகின் முன்னணியில் அமெரிக்காவுடன் நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈரானில் இருந்த தீய ஆட்சியைத் தூள் தூளாக நசுக்கி உள்ளதாகவும், இஸ்ரேல் இன்று தன்னை தற்காத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக நாகரீகத்தை காப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது, இஸ்ரேல் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆபத்துகளை முறியடிக்கவும், தனது பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதியான முறையில் செயல்பட்டு வருவதாக நெதன்யாகு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''நன்மை எது, தீமை எது என பிரித்து பார்க்க தெரியாத நாடுகள் இஸ்ரேலிடமிருந்து பாடம் கற்று கொள்ளலாம்.'' என்று தெரிவித்துள்ளதோடு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய 02 நாடுகளும் சுதந்திரமான உலகின் முன்னணிகள் என்றும், மோசமான தீய சக்திகளை எதிர்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அடுத்து, இந்த நிகழ்ச்சியில் பேசிய  இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக்,தெரிவித்துள்ளதாவது; 

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு உணர்வுகளுக்கு மத்தியில், இஸ்ரேல் முன் எப்போதையும் விட வலிமை மற்றும் அதிகாரத்துடன் நிமிர்ந்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ''நாம் ஒரே குடும்பம்; நமக்கென ஒரு பொதுவான விதி உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஒரு குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் எழலாம்; ஆனால், அது ஒருபோதும் தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் போராட்டம் நீண்டுகொண்டே சென்றாலும், இறுதியில் இஸ்ரேல் "மேலும் வலிமை பெற்றதாகவும், அதிகாரம் மிக்கதாகவும்" வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.