Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், உச்சகட்ட அரசியல் பரபரப்பில் தேர்தல் களம் உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு கூப்பன்கள், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையம் இதற்காக கிடுக்குபிடி சோதனை நடத்தி வரும் நிலையிலும், சில இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தவகையில், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் போலி காசோலைகளை விநியோகம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு:நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி, தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது முதலே தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களிடம் பல்வேறு எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். “தொகுதிக்கு கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவதால், அவருக்குப் பிரச்சார இடங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
போலி டோக்கன்கள் விநியோகம்:இந்நிலையில், வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிமுகவினர் வினோத முறையைக் கையாண்டுள்ளனர். 10,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் என அச்சிடப்பட்ட காசோலை போன்ற வடிவத்திலான போலி டோக்கன்களை இரவோடு இரவாக வீடு வீடாக விநியோகம் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
தேர்தல் பறக்கும் படை அதிரடி:இது குறித்த தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், குறிப்பிட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளைக் கண்டதும் டோக்கன் விநியோகம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, போலி காசோலைகள் வழங்கப்பட்ட வீடுகளில் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்?.. ரகசியம் உடைத்த இபிஎஸ்..
கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:தோல்வி பயத்தில் அதிமுக வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக இத்தகையச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக தரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. போலி காசோலைகளை விநியோகித்த அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.