Tamilnadu Polls 2026: பாஜகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் அடையாள அட்டை எண்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைச் சேகரித்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், உச்சகட்ட அரசியல் பரபரப்பில் தேர்தல் களம் உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு கூப்பன்கள், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையம் இதற்காக கிடுக்குபிடி சோதனை நடத்தி வரும் நிலையிலும், சில இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் விவரம் சேகரிக்கும் பாஜக:பாஜகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் அடையாள அட்டை எண்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைச் சேகரித்து வருவதாகவும், இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி அதிருப்தி தெரிவித்தார். அதோடு, சோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, பாஜகவினருக்குப் பணம் கொடுத்து வருவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: “அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..
பணப் பரிமாற்றம் செய்த ஸ்ரீதர் வேம்பு:இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ரீதர் வேம்பு ஒரு கோடீஸ்வரர், அவரிடம் பல வங்கிகளில் கோடிக்கணக்கான பணம் உள்ளது. அவர் பாஜகவினரின் பெயர்களுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி வருகிறார். நேற்று மட்டும் அவர் அனுப்பியதில் 70 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒரே காசோலையில் இவ்வளவு பெரிய தொகையை அனுப்பி, அதை எடுத்து விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதைப் வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதிமுக-வின் “போலி காசோலை” அரசியல்:அதிமுகவினர் 10,000 ரூபாய் மதிப்பிலான போலி காசோலைகளை விநியோகம் செய்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சாடினார். இந்த செக் வடிவிலான துண்டுப் பிரசுரங்களை வழங்கி பரப்புரை செய்து வருவதாகவும், இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் கூறினார். மேலும், பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சட்டத்துறை சார்பில் நீதிமன்றத்தை அணுக நேரிடும் என்று எச்சரித்தார்.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
அண்ணாமலைக்கு பதிலடி:“திமுக தலைவர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்” என்ற அண்ணாமலையின் விமர்சனத்திற்குப் பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை “பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்” என்று சாடினார். ராகுல் காந்தியின் வருகையே அண்ணாமலையின் பொய்களுக்குப் பதில் சொல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.