``இந்தியாவின் அரசியல் வரைப்படத்தையே பாஜக மாற்ற முயற்சி செய்கிறது!" - ராகுல் காந்தி
Vikatan April 17, 2026 08:48 PM

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "இந்த மசோதாவை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

இந்தியாவின் அரசியல் வரைப்படத்தையே பாஜக மாற்ற முயற்சி செய்கிறது. ஜம்மு காஷ்மீரைப் போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற நினைக்கிறது பாஜக. அரசமைப்பை விட மனுஸ்மிருதியே பாஜகவிற்கு முக்கியம்.

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. ஆனால் தென் மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த மசோதா ஒரு போதும் நிறைவேறாது. தொகுதி மறுவரையறை மசோதா தேச விரோதமானது. தாங்கள் மட்டுமே இந்தியர்கள் என பாஜகவினர் நினைக்கின்றனர்.

பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்க முயற்சி செய்கிறது. மேஜிக் செய்பவர்களை போல ஒன்றின் மீது ஒன்றை மறைத்து வித்தை காட்டுவது போல இந்த மசோதா உள்ளது.

ராகுல் காந்தி

பந்துகளைத் தூக்கி போட்டு பிடிக்கும் வித்தைக்காரர் பந்துகளை பிடிக்காமல் விட்டால் மக்கள் சிரிப்பார்கள். பணமதிப்பிழப்பு, ஆப்ரேஷன் சிந்தூர் என பல மாயாஜாலத்தை நிகழ்த்திய வித்தைக்காரர் தற்போது பிடிப்பட்டுள்ளார்" என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி சாடியிருக்கிறார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.