தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருப்பதால் தங்களின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டி இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். திமுகவின் கடும் எதிர்ப்பையும், போராட்டத்தையும் தொடர்ந்து, தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.
அவர்களின் சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பதால் தொகுதி மறுவரையறை மசோதா முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக உள்ளது என விமர்சித்துள்ளார். அவர்கள் கூறியதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என முதலமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மசோதாவில், தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், நினைத்த நேரத்தில் நினைத்த முறையில் பாஜகவிற்கு சாதகமான வகையில் தொகுதிகளை மாற்றியமைத்துக் கொள்ள வழிவகை இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவசர கதியில் இதனை நிறைவேற்றக் கூடாது என்று கூறியுள்ள முதலமைச்சர், மத்திய அரசு முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எண்ணிக்கை பலம் இருப்பதால் தங்களின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டி இருக்கும்.'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.