கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னா அருகிலுள்ள தளிபரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 13 பேர், சித்திரை விசு திருநாளை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி மகிழ்ச்சியான சுற்றுலாவிற்காக வால்பாறை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

ஆனால், அந்த சந்தோஷப் பயணம் திடீரென சோக நிழலாக மாறியது. வால்பாறை-பொள்ளாச்சி மலைச்சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவை மாலை 5.15 மணியளவில் அடைந்தபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், கணநேரத்தில் சுமார் 800 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து புரண்டது.
மலைச்சரிவில் உருண்டு கீழே வீழ்ந்த அந்த வேன், 9-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் சிதைந்து நொறுங்கிய நிலையில் விழுந்தது. விபத்தின் தாக்கம் அதீதமாக இருந்ததால், வாகனத்தில் இருந்தவர்கள் பல திசைகளில் தூக்கி எறியப்பட்டு, பலத்த காயங்களுடன் உயிர் துடிப்பில் போராடினர்.
இந்த பரிதாபகரமான காட்சியை கண்ட வழிப்போக்கர்கள் உடனடியாக காடம்பாறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா தலைமையில் காவலர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் கடுமையாக காயமடைந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து அந்த மலைப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்திற்கான காரணங்களை குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.