தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரைத்துறையில் பிரபலமான நடிகருமான விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் அரங்கில் தீவிர அசைவுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு முக்கிய தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கும் அவர், மாநிலம் முழுவதும் சூடுபிடித்த பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அனல் பறக்கும் அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் வரவேற்புடன் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தாம் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் மீண்டும் பிரசாரம் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த கடந்த 30-ஆம் தேதி பெரம்பூரில் உற்சாகமான ரோடுஷோ மூலம் கவனம் ஈர்த்திருந்த விஜய், இம்முறை பாரம்பரிய கூட்டங்கள் மற்றும் மேடைகள் அல்லாமல், வீடு தோறும் சென்று நேரடியாக வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் புதிய அணுகுமுறையைத் தேர்வு செய்திருந்தார்.
இதற்காக தேவையான அனுமதிகள் பெறப்பட்ட நிலையில், காவலர்கள் அனுமதி வழங்கியதும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த பின்னணியில், இன்று நடைபெறவிருந்த வீடு தோறும் பிரசாரத்திற்கு அனைத்தும் தயார் நிலையில் இருந்தபோதிலும், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த திடீர் மாற்றம் பெரம்பூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்த கட்டமாக விஜய் எப்படிப் பிரசாரத்தை முன்னெடுப்பார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.