சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவருடைய வேட்புமனுவை முழுமையாக நிரப்பாததால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தவெகவினர் அருண்குமார், அதிமுகவிடம் விலைபோய் விட்டதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், தவெக தலைவர் விஜய், இன்று எக்ஸ்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''இடைப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். எனவே, தேர்தலில் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தை, தவெக சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் பிரேம்குமாருக்கு கட்சியினர் வாக்களிக்க கட்சியினரையும், தொகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இடைப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.