2026 - ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின், தலைவர் நடிகர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டி இடுகிறார். அதன்படி அங்கு மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இன்று புனித அந்தோணியார் தேவாலயத்தில் மண்டியிட்டு நடந்து சென்று மௌனப் பிரார்த்தனை செய்ததோடு, கொட்டப்பட்டில் உள்ள பச்சை நாச்சி அம்மன் கோயிலிலும், அதே பகுதியில் மசூதிக்கு சென்றும் அவர் வழிபாடு மேற்கொண்டார்.
அதன் பின்னர், திருச்சி கே.கே.நகர், பெரியார் ரவுண்டானா பகுதிகளில் திறந்த வாகனத்தில் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார்.
அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலைகளை அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரண்டு இடங்களில் விஜய் பேசுவதற்கான மேடை மற்றும் ஒலிபெருக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், எவ்வித உரையும் இன்றி தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தபடி அவர் தனது வாகனத்தில் புறப்பட்டார்.
அதற்கு முன்னதாக, திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.