ஆந்திராவில் தொடங்கப்பட்ட மெகா சுரங்கம்...! 1000 கிலோ தங்கம் எடுக்கும் பிரம்மாண்ட இலக்கு...!
Seithipunal Tamil April 20, 2026 09:48 PM

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோனாகிரி தங்கச் சுரங்கத் திட்டம், இந்தியாவின் தங்க உற்பத்தி துறையில் புதிய பொற்காலத்தைத் திறக்கத் தயாராக உள்ளது. அடுத்த மாதம் இந்த பிரமாண்ட திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் முதல் மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கமாக கருதப்படும் இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு சுமார் 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தற்போது இந்தியா ஆண்டுக்கு 800 டன் மேற்பட்ட தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்த திட்டம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கோலார் தங்கச் சுரங்கம் 2000ஆம் ஆண்டு மூடப்பட்ட பிறகு, ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி சுரங்கத்தில் மட்டும் குறைந்த அளவில் தங்க உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜோனாகிரி, எர்ராகுடி மற்றும் பகிதிராயி கிராமங்கள் சுற்றுவட்டாரத்தில் 598 ஹெக்டேர் பரப்பளவில் புதிய தங்க வளம் கண்டறியப்பட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆய்வுகளின்படி, இப்பகுதியில் 13.1 டன் முதல் 42.5 டன் வரை தங்க வளம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜியோமிசோர் சர்வீசஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ரூ.400 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் சுரங்க அமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தின் தொடக்கத்தை சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். உற்பத்தி தொடங்கியதும், ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது; இதன் மூலம் இந்தியாவின் தங்க இறக்குமதி சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னேறினால், மேலும் பல முதலீட்டாளர்கள் தங்கச் சுரங்கத் துறையில் கால் பதிப்பார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் 50 முதல் 100 டன் வரை தங்க உற்பத்தியை இலக்காகக் கொண்டு இந்தியா முன்னேற வேண்டும் என ஜியோமிசோர் நிறுவன இயக்குநரும் டெக்கான் கோல்ட் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஹனுமன் பிரசாத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.