அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள ஷ்ரெவ்போர்ட் நகரில் சமீபத்தில் குடும்ப தகராறினால் 08 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து கோரி மனைவியுடன் சண்டையிட்டு வந்த அந்த நபர் சம்பவத்துத்தன்று ஆக்ரோஷமான நிலையில் தனது வீடு உட்பட மூன்று வீடுகளில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு இருந்த போது அவரது குழந்தைகள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த நபர் துப்பாக்கி எடுத்து, தனது மனைவி மற்றும் உறவினர் பெண் ஆகியோர்மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காது அங்கு, விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை சரமாரியாக சுட்டுத்தள்ளியுள்ளார். இதில் அவர் குழந்தைகள் 07 பேர் மற்றும் மற்றொரு குழந்தையென 08 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
அப்போது ஒரே ஒரு குழந்தை (09வது குழந்தை) மட்டும் அவர் பார்வையில் படாமல் வீட்டுக்கூரைக்கு தாவி சென்று அங்கு இருந்து கீழே குதித்து தப்பியோடியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் பின்னர் சாலைக்கு ஓடி சென்று துப்பாக்கி முனையில் காரில் வந்த நபரை மிரட்டி கீழே இறங்க செய்து அந்த காரில் தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அடுத்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
ஈவு இரக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஷமார் எல்கின்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் அவர் தப்பியோடிய திசையில் காரில் விரட்டி சென்று மடக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் குற்றவாளி எல்கின்ஸ் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த 08 குழந்தைகளும் 03 வயது முதல் 14 வயது வரையிலானவர்கள் என தெரியவந்துள்ளது. வீடு கூரையில் இருந்து குதித்த சிறுவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுடப்பட்ட 02 பெண்களும் படுங்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி 2024-ஆம் ஆண்டில் இல்லினாய்ஸ்ல் ஜூலியட் நகரில் 08 பேர் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.