தப்பு பண்ணவன் ஓடிப்போயிட்டான்.. நான் தக்காளி தொக்கா?!.. கரூர் சம்பவத்திற்கு பொங்கும் செந்தில் பாலாஜி!..
WEBDUNIA TAMIL April 22, 2026 07:48 PM


தவெக தலைவர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு கரூருக்கு சென்றபோது அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தவுடன் விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டார். விஜய் தாமதமாக வந்ததே அதற்கு காரணம் என திமுகவினர் குற்றம் சொன்னார்கள். ஆனால், இது திட்டமிட்டு அரசியல் சதி.. இதுபற்றி சிபிஐ விசாரிக்க வேண்டுமென தவெக நீதிமன்றத்திற்கு சென்றது.. தற்போது இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது..

கரூர் சம்பவத்தில் மயக்கமடைந்தவுடன் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
ஆனால் கரூர் சம்பவத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக தவெக புகார் சொன்னார்கள். விஜயும் அதை நம்புகிறார். சமீபத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜய் ‘கரூர் சம்பவத்தில் வேண்டுமென்றே என் மீது பழி போட்டார்கள்.. போலீசார் அனுமதி கொடுத்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன்.. நாமக்கல்லில் இருந்து வரும் வழியில் என்னை பார்ப்பதற்காக மக்கள் நிறைய பேர் இருந்ததால் தாமதமாகிவிட்டது..

‘உங்கள் மீது தவறில்லை என்றால் உங்கள் அடிமையை (செந்தில் பாலாஜி) ஏன் கரூரில் போட்டியிட வைக்காமல் கோவைக்கு அனுப்பினீர்கள்?’ என முதல்வர் ஸ்டாலினை நோக்கி விஜய் கேள்வியும் எழுப்பியிருந்தார். ஏற்கனவே செந்தில் பாலாஜியை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்த செந்தில் பாலாஜி ‘ஒரு சம்பவம் நடக்கிறது.. 41 பேர் இறந்துட்டாங்க.. பல பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
என் ஊர் மக்கள்.. 20 வருஷமா என்னை நேசித்த, எனக்கு வாக்களித்த மக்கள்.. அவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் போய் நிற்காமல் யார் நிப்பா?.. கூட்டம் நடத்தினவங்க நைட்டோட நைட்டா பிளைட் புடிச்சி ஓடிப் போயிட்டாங்க.. நானும் அப்படி ஓடணுமா?.. என் மக்களுக்கு ஒன்னுனா நான்தானே போய் நிற்கணும்.. எல்லா உதவிகளும் செய்தேன்.. அந்த உணர்வுகளை கொச்சைப்படுத்துறவங்க எவ்வளவு மட்டமானவர்களாக இருப்பார்கள்..

12 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு ஏழு மணிக்கு வந்தது.. 500 மீட்டருக்கு முன்பு லைட்டை ஆப் பண்ணிட்டு ஸ்கிரீனை போட்டுட்டு உள்ளே போனது.. பேச ஆரம்பிச்சதும் நடந்த தள்ளுமுள்ளு.. தண்ணீர் பாட்டில் கேட்டது.. ஆம்புலன்ஸை வர சொன்னது.. என அங்க நடந்த எல்லாமே மக்களுக்கு தெரியும்.. தப்பு பண்ணவன் ஓடி போய்ட்டான்.. அதுல என்ன சம்பந்தப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கு?’ என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.