கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் திருமணமாகாத விரக்தியில் எலி பேஸ்ட் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்கோவிலூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் திருமணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயபிரகாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெயபிரகாஷ், சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.