கோவையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகளை ஏற்றி வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, எதிர்பாராத தருணத்தில் கோவில்பட்டி அருகே விபத்து சுழலில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. மூப்பன்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்டு கலவை டேங்கர் லாரியை கவனிக்க முடியாமல், பேருந்து பலத்த வேகத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிர்ச்சிகர மோதலில், பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சிதிலமடைந்தது. விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், ஓட்டுநர் உட்பட 20 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 8 பெண்களும், ஒரு சிறுமியும் இருப்பது பரிதாபத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக, உடுமலைபேட்டையை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர்ப்போராட்டத்தில் தவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புப்படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். தொடர்ந்து, காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் மூவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் போக்குவரத்தை சீரமைத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.