லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 160 என்ற குறைந்த இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது. லக்னோ அணியினரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (22) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (08) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரேல் (0) பராக் (20), ஹெட்மயர் (22), பெரேரா (20) என ஆட்டமிழந்தனர்.
ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன், சுபம் தூபே 19 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

லக்னோ அணியில் முகமது ஷமி, மொஹ்சின் கான் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மட்டுமே ஓரளவு நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் ஆடி 41 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன் ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, எய்டன் மார்க்ரம் மூவரும் அடுத்தடுத்து ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பூரான் (22)ரன்களில் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நந்திரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பிஸ்னோய் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

இதனையடுத்து லக்னோ அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மாத்திரம் எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். லக்னோவின் மயங்க் யாதவ் இந்தப் போட்டியில் 04 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏமாற்றமளித்தது அந்த அணியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வானார்.