சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தின் வானிலை நிலையை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டிய பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி செயல்பட்டு வருகிறது.
இதனுடன், கிழக்கு விதர்பாவிலிருந்து குமரிக்கடல் வரை தெலங்காணா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை உருவாகி, வானிலை மாற்றங்களுக்கு காரணமாக உள்ளது.

ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம் கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளிலும் இதே போன்ற மழை சாத்தியம் நிலவுகிறது. இதற்கு மாறாக, மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 25 முதல் 29 வரை, அதே பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடர்ச்சியாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட சூழல் நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வெப்பநிலை நிலவரத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 23 முதல் 27 வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், சில இடங்களில் சற்று அதிகரிப்பு காணப்படலாம். குறிப்பாக உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
ஆனால் கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே நீடிக்கும்.
அதே சமயம், அதிக வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் காரணமாக கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் அசௌகரியமான சூழ்நிலை உருவாகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்சம் 27 முதல் 28 டிகிரி வரைவும் இருக்கும். அதிக வெப்பமும் ஈரப்பதமும் இணைந்து நிலவுவதால், மக்கள் சற்று சிரமத்தை உணரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.