"இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில்; அடுத்து பெட்ரோல், டீசல்" - கேஸ் விலை உயர்வு பற்றி ராகுல்
Vikatan May 01, 2026 08:48 PM

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிலிண்டர்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வணிக சிலிண்டரின் விலை உயர்வுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், "தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயர்வு வரும் என்று நான் சொல்லியிருந்தேன். இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிந்த உடன் வணிக சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதுதான் நீங்கள் செலுத்தும் தேர்தல் பில். அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் உயரும்.

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ.993 உயர்த்தியது வணிகர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் பெரும் சுமையாக மாறும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சிலிண்டர் விலை ரூ.1,380 அதிகரித்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% அதிகரித்திருக்கிறது.

தேநீர்க் கடை, தாபா, ஹோட்டல், பேக்கரி, இனிப்புக் கடை என அனைவரின் சமையலறைச் சுமையும் அதிகரித்துள்ளது. அடுத்து இது உங்கள் தட்டையும் (உணவையும்) பாதிக்கும்" என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.