Karur Election 2026 Result: 41 பேர் உயிரிழப்பு.. கரூரிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை..
TV9 Tamil News May 04, 2026 05:49 PM

மே 2, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மே 4ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, தமிழகத்தில் இதுவரை எதிர்பாராத ஒரு திருப்பமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 107 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுகவும், மூன்றாவது இடத்தில் திமுகவும் உள்ளன.

தமிழக வெற்றிக்கழகத்தின் வருகை, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கரூரிலும் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:சரிந்தது திமுக கோட்டை: வெறிச்சோடிய அறிவாலயம்..பின்வாசல் வழியாக வெளியேறிய திமுக புள்ளிகள்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர்:

2025ஆம் ஆண்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். அதன்படி, செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பிரச்சாரம் முடிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சில நொடிகளில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பணையூருக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவம், விஜய்க்கு ஒரு பெரிய பின்னடைவு என பார்க்கப்பட்டது. அரசியல் கூட்டத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகளையும் உருவாக்கியது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: தோல்வி முகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் முக்கிய அமைச்சர்கள்.. தொடர் முன்னிலையில் தவெக.. கலங்கும் திமுகவினர்..

கரூரில் தவெக முன்னிலை:

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது வரை, தமிழகத்தில் பல இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. கரூர் சட்டமன்ற தொகுதியில், கூட்ட நெரிசல் சம்பவத்தால் எதிர்ப்பு அலை இருந்தபோதிலும், தமிழக வெற்றிக்கழகம் அங்கு முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது, விஜயின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் அவசியம். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் 107 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி யாருக்கு என்பது விரைவில் தெளிவாகும். கரூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 2,34,073 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அடங்குவர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.