சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. திமுக அதிமுகவை கடந்து விஜய்யின் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பாணியில் எதிர்கொண்ட முதல் பொதுத் தேர்தலிலேயே விஜய் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
TVK Vijay
1972 இல் திமுகவிலிருந்து பிரிந்து வந்து அதிமுகவை தொடங்கினார் எம்.ஜி.ஆர். திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பை மட்டுமே மையப்படுத்தி எம்.ஜி.ஆர் தனது அரசியலை நகர்த்தினார். அதற்கு முத்தாய்ப்பாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் முதலில் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது. எமெர்ஜென்சி இந்தியாவின் இருண்ட காலமாக பார்க்கப்பட்டது. திமுக எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதிமுக ஜனநாயக விரோதமான எமெர்ஜென்சியை ஆதரித்தது.
அப்படி இருந்தாலும் 1977 இல் எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் பொதுத்தேர்தலிலேயே அதிமுகவுக்கு தனி மெஜாரிட்டியை எட்டி ஆட்சியை பிடித்தது. அப்போதும் எம்.ஜி.ஆர் மீது திமுக கூத்தாடி, சினிமாக்காரர் போன்ற விமர்சனங்களை முன்வைத்தது. ஆனால், மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஆந்திராவின் உச்சநட்சத்திரமான என்.டி.ஆர் 1982 மார்ச்சில் தெலுங்கு தேசம் என்கிற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அப்போதைய ஆந்திர முதல்வர் அஞ்சயாவை ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் வைத்து 'கோமாளி' எனக் கூறி அவமதித்திருந்தார்.
தெலுங்கு மக்களையும் ஆந்திராவையும் காங்கிரஸ் அவமதித்ததாக கூறி ஆந்திராவின் பெருமையை மீட்க போகிறேன் என என்.டி.ஆர் மக்களிடம் பிரசாரம் செய்தார். கடவுளே தரையிறங்கி வந்ததைப் போல கொண்டாடிய மக்கள் ஆரம்பித்து 9 மாதங்களே ஆன தெலுங்கு தேசத்துக்கு 201 தொகுதிகளை கொடுத்தனர்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் பாணியில் விஜய்யும் தேர்தலுக்கு முன்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து, களத்தில் இருந்த இருபெரும் திராவிட கட்சிகளையும் விஞ்சி சாதித்திருக்கிறார். 1967, 1977 இல் தமிழகத்தில் நடந்த மாற்றங்களைப் போன்று 2026 லும் நடக்குமெனக் கூறி அதை நடத்தியும் காட்டியிருக்கிறார் விஜய்.!