கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி ஒரு துரதிஷ்டவசமான வரலாற்றை கொண்டுள்ளது. அதாவது தமிழக அரசியலில் ஒரு தனித்துவமான மற்றும் விசித்திரமான தொகுதியாக இந்த வேப்பனஹள்ளி பார்க்கப்படுகிறது. இந்த வேப்பனஹள்ளி தொகுதியில் ஜெயிக்கும் கட்சி ஆட்சியை இழக்கும். (அதாவது, ஆளுங்கட்சியாக வரமுடியாது) என்ற நம்பிக்கை உள்ளது. அது தொடர் கதையாகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு தொடர்ந்து அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு தொகுதியாகும். 2011-இல் வேப்பனஹள்ளி தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து, அந்த தொகுதியில் எந்தக்கட்சி வேட்பாளர் வெற்றி. பெறுகிறாரோ, அந்தக் கட்சி ஆட்சி அமைத்ததில்லை என்ற ஒரு சோகம் உள்ளது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றாலும், தி.மு.க. தான் ஆட்சி அமைத்தது.
தற்போதைய தேர்தலில், தி.மு.க. சார்பில் பி.எஸ்.சீனிவாசன், அ.தி.மு.க. சார்பில் மீண்டும் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.ஆர்.சம்பங்கி ஆகியோர் களம் கண்டபோதும், இதில் தி.மு.க. வேட்பாளர் பி.எஸ்.சீனிவாசன் வெற்றி பெற்றார். ஆனால், தி.மு.க. படு தோல்வி அடைந்துள்ளது. ஆட்சியமைக்க முடியாது. ஆக மொத்தத்தில் வேப்பனஹள்ளி பார்முலா இந்த தேர்தலிலும் மீண்டும் எதிரொலித்துள்ளது.