"மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!" - விஜய்க்கு ஆதரவாகக் களம் இறங்கிய கமல்ஹாசன்!
Dinamaalai May 07, 2026 05:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவும் அரசியல் முட்டுக்கட்டை குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை, ஆளுநர் மாளிகையின் தற்போதைய செயல்பாடுகளுக்குப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் அதிக இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "மக்களாட்சியில் வாக்களித்த மக்களின் தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்பிற்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-விற்கு ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும்."

"யார் பக்கம் பெரும்பான்மை இருக்கிறது என்பதை ஆளுநர் மாளிகையின் நான்கு சுவர்களுக்குள் முடிவு செய்யக் கூடாது. அதைச் சட்டமன்றத்தின் தளத்தில் தான்  நிரூபிக்க வேண்டும்."

1994-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் கமல்ஹாசன் தனது பதிவில் மேற்கோள் காட்டியுள்ளார். ஒரு கட்சியின் பலத்தைச் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் மற்றும் கமல்ஹாசன் இடையே திரைத்துறையைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் ஒரு புரிதல் நிலவி வரும் சூழலில், இந்த இக்கட்டான நேரத்தில் கமல் ஆதரவு தெரிவித்திருப்பது தவெக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.