விஜயின் தவெக ஆட்சியமைக்க 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பினார். அதில், காங்கிரஸ் மட்டும் திமுகவிலிருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்து 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கிவிட்டது.
விஜய் ஆட்சி அமைக்க இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், விசிகவும், இடதுசாரிகளும் இப்போதுவரை தவெகவுக்கு ஆதரவு இல்லை என்றும் சொல்லவில்லை. ஆதரவு கொடுப்பதாகவும் சொல்லவில்லை. இதுபற்றி யோசித்து முடிவெடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்ட நிலையில் விசிக மற்றும் இடதுசாரிகளும் வெளியேறி விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினின் இல்லத்தில் தற்போது விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிபிஎம் சண்முகம், சிபிஐ வீரபாண்டியன், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் ஆலோசனை செய்து வருகிறார்கள். விஜய் தரப்பு விசிக, இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.