சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் இன்று பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
முதல்வர் ஜோசப் விஜய்
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதுடன், 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பதவியேற்ற 9 அமைச்சர்களில், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகனும் ஒருவர். பதவியேற்பிற்கு பின் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
ராஜ்மோகன், "என் மீது தலைவர் வைத்திருக்கிற நம்பிக்கை, எங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கை. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்காகக் கடுமையாக நாங்கள் போராடுவோம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் இனி மக்களுக்கானது. உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இந்த நாள் என்பது சரித்திரத்தில் ஒரு பொன்னாளாக மாறியிருக்கிறது.
விஜய் - ராஜ்மோகன்
இதற்கு முன்பு இப்படிப் பல விழாக்கள் இருந்தாலும் கூட, இந்த விழா என்பது ஒரு புதிய சரித்திரத்தினுடைய ஒரு புதிய பக்கமாக இருக்கிறது." என்றவரிடம், "சரியாக 30 நாட்களுக்கு முன்பு தவெக ஆட்சி அமைப்பது கனவு என விமர்சித்திருந்தார்களே.." எனச் செய்தியாளர் கேட்டதற்கு, "அதாவது தூக்கத்தில் காண்பது இல்லை கனவு, உன்னை தூங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று கலாம் ஐயா சொன்னது போல, இந்தக் கனவு என்பது பெரும் கனவு. இந்தக் கனவு ஒவ்வொரு நாளும் நனவாகப் போகிற கனவு. " எனக் கூறியிருக்கிறார்.